ஊட்டி, மே 8: தூத்துகுடி மாவட்டம், முக்கனி, புதுமனை நாடர் தெருவை சேர்ந்தவர் தாமஸ் (52). தூத்துக்குடியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். தொட்டபெட்டா சிகரத்தை சுற்றி பார்ப்பதற்காக சென்றார். அப்போது தாமஸ் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள ஒரு நடைபாதை கடைக்கு பின்புறமும் சென்றுள்ளார்.
இதனை கவனித்த சாலையோர கடை வியாபாரி ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியை சேர்ந்த சுரேஷ் (39) என்பவர், தாமசை தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், தாமஸுக்கு இடதுபுற நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தாமஸ் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தாமஸ் அளித்த புகாரின் பேரில் தேனாடுகொம்பை போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தாமசை தாக்கிய சுரேசை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.