லக்னோ: கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற போலீஸ் காவலரை அடித்து கொலை செய்த ரவுடியை உத்திரபிரதேச காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். கஸ்கஞ்ச் மாவட்டம் நாக்லாத் திமத் என்ற கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த புகாரை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர் தேவேந்திரா ஆகியோர் சோதனை மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது சாராய வியாபாரியும், ரவுடியுமான மோதி திம்மர் தலைமையிலான கும்மல் இருவரையும் உருட்டு கட்டைகளால் கண்மூடித்தனமாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் உள்ளூர் மக்கள் மீட்டு கஸ்கஞ்ச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காவலர் தேவேந்திரா உயிரிழந்தார். இதுகுறித்து கஸ்கஞ்ச் எஸ்.பி. மனோஜ் தெரிவித்ததாவது, கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவலர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இதில் காவலர் ஒருவர் உயிரிழந்துவிட்டார். உதவி ஆய்வாளர் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனர். மோதி திம்மர் என்ற முக்கிய குற்றவாளியையும் அவனது சகோதரன் மற்றும் சில கூட்டாளிகளையும் தேடி வருகின்றோம் என குறிப்பிட்டார். தொடர்ந்து, படுகாயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் அசோக் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை பிடிக்க காவல்துறையினர் சென்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போலீஸ் நடத்திய துப்பாக்கிசூட்டில் ரவுடி மோதி திம்மரின் சகோதரர் எல்கர் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான். காவலரை கொன்ற கும்பலை கண்டறிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காவலர் தேவேந்திராவின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஆணையிட்டார். …