உளுந்தூர்பேட்டை அருகே கட்டையால் அடித்து மனைவி கொலை

உளுந்தூர்பேட்டை, ஜூலை 5: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அ.குறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி(33), கூலி தொழிலாளி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகே உள்ள கோவிலானூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வானை(28) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கேரளா சென்று கூலி வேலை செய்து வந்துள்ளனர். அப்போது கேரளாவை சேர்ந்த ஆண் ஒருவருடன் தெய்வானைக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வீரமணி பலமுறை கண்டித்தும் தெய்வானை அவரது தொடர்பை கைவிடாததால் வீரமணி பலமுறை தெய்வானையை அடித்து உதைத்துள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சொந்த ஊரான அ.குறும்பூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். மீண்டும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த வீரமணி கட்டையால் தெய்வானையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தெய்வானை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் சென்று தெய்வானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் மனைவியை கட்டையால் அடித்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை