Thursday, September 26, 2024
Home » உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் கோர விபத்து சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7 பேர் பரிதாப பலி

உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலையில் கோர விபத்து சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7 பேர் பரிதாப பலி

by Karthik Yash

உளுந்தூர்பேட்டை, செப். 26: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று திரும்பிய சுற்றுலா வேன் மரத்தில் மோதி 7 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 22 பேர் ஒரு சுற்றுலா வேனில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். வேனை வசந்தகுமார் (23) என்பவர் ஓட்டினார். கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் இரவு திரும்பினர். நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் வேன் மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் வேனில் சென்ற மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் முருகன் (55), மகேந்திரன் மகன் சக்தி (23), பச்சையப்பன் மகன் செல்வம் (50), ராதாகிருஷ்ணன் மகன் துரை (35), குப்புசாமி மகன் ராமலிங்கம் (60), குணசேகரன் மகன் ரவி(60) ஆகிய 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குசென்ற திருநாவலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய டிரைவர் வசந்தகுமார், வேனில் பயணம் செய்த வெங்கடேசன் (53), இளங்கோவன் (26), சரவணன் (28), கௌதமன் (23), கருணாகரன் (58), பார்த்திபன் (30), டிராவிட் (20), நவீன் (18), சரவணன் (22), குணா (27), பாலகிருஷ்ணன் (65), பிள்ளையார் (46), கலியன் (75), தனம் (50), தேவிகா (47) உள்ளிட்ட 17 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தினால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதில், நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பில் டிரைவர் திடீரென தூங்கியதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த தனம் என்பவர் உயிரிழந்தார். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பியபோது மரத்தில் வேன் மோதி 7 பேர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ₹2 லட்சம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் வழியில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், மேட்டத்தூர் கிராமம், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜெ.எஸ். நகர் அருகில் நேற்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ராணிப்பேட்டை மாவட்டம், மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரவி , செல்வம், ராமலிங்கம், முருகன், துரை, சக்தி, தனம் ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

4 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi