உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 2 அரசு பேருந்துகள், 5 வாகனங்கள் மோதி விபத்து பெண் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம்

 

உளுந்தூர்பேட்டை, நவ. 11: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூத்தக்குடி மேம்பாலம் அருகில் நேற்று ஒரு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதே சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மற்றும் நான்கு கார்கள் உள்ளிட்ட ஏழு வாகனங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு காரில் சென்ற மதுரை பொன்னாகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (28), இவரது மனைவி ராஜஸ்ரீ(25) மற்றும் ஸ்ரீவில்லிபுதூர் ஜோஸ்வா (22), சென்னை துரைப்பாக்கம் குமாரராஜா (28), விஜயலட்சுமி (30), நாகர்கோவில் ஆனந்த விஷ்ணு(32), சென்னை தாம்பரம் மகேஷ்குமார் (59) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடன் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற எடைக்கல் காவல் நிலைய போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் ராஜஸ்ரீ மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்