உளுந்தூர்பேட்டை, செப். 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகளை நேற்று ரவிக்குமார் எம்பி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், மது ஒழிப்பு மாநாட்டில் ஒரு லட்சம் பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் மாநாடாக அமையும். இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி மதுவிலக்கு கொள்கையில் ஒத்த கருத்துடைய தலைவர்கள், மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். இந்திய அளவில் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படும்.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களை தவிர்த்து அதிமுக மட்டுமல்ல மற்ற எந்த கட்சியாக இருந்தாலும் நேரில் சென்று அழைக்கவில்லை. தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை ஏற்கும் நிலை உருவாகும், என்றார். மாவட்டச் செயலாளர்கள் அறிவுகரசு, பழனியம்மாள், தலைமை நிலைய பொறுப்பாளர் தயாளன், மண்டலத் துணைச் செயலாளர் பொன்னிவளவன், தொகுதி செயலாளர் சேரன், நகர செயலாளர் வசந்தன் மற்றும் நிர்வாகிகள் மணிகண்டன், தீந்தமிழன், கோவிந்தன், பூசைமணி, பரந்தாமன், கார்முகிலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.