சென்னை: உலக வங்கி நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைத்தல், அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட ரூ.1,702 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்போவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் செயலாளர் கிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்வித தாமதமுமின்றி வழங்கிட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும்.மேலும், ஒருங்கிணைத்தல், அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூ.1,702 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டத்தை தமிழ்நாட்டில் விரைவாக செயல்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டடங்களை மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். * இடஒதுக்கீட்டை உறுதி செய்க..மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடும், 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும்….