மாமல்லபுரம்: உலக யோகா தினம் முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட இன்று இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, தொல்லியல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில், தோன்றிய உடற்பயிற்சி தியான முறையான யோகாசனத்தின் நன்மைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி, 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. யோகா வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நாளில் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உலக யோகா தினம் முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று (21ம் தேதி) ஒரு நாள் மட்டும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புராதன சின்னங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம், என்று தொல்லியல் துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.