டெல்லி : தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்தை எட்டி வருவதால் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து உலகம் முழுவதும் 11,500 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 116 நாடுகளில் உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது பரவி உள்ளது. அதே நேரம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பும் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. உலகம் முழுவதும் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், கொரோனா பரவலுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றன. அத்துடன் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பற்றாக்குறையால் பல ஆயிரம் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பால் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனங்கள் கூறுகின்றனர். இதனால் பல ஆயிரம் விமானங்கள் தாமதாமாக இயக்கப்படுகின்றன. நேற்று உலகம் முழுவதும் 3000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் தற்போது வரை உலகம் முழுவதும் 11, 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …