உயர்கல்வி கற்க நாவல் பழம் விற்கிறார் வட்டிக்கு செல்போன் வாங்கி ஆன்லைனில் படிக்கும் மாணவி: காரைக்குடி அருகே குடும்ப வறுமையால் பரிதாபம்

காரைக்குடி: ஆன்லைன் கல்விக்காக வாங்கிய செல்போனுக்கு வட்டி கட்டுவதற்காக பிளஸ் 2 மாணவி நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நைனாபட்டியை சேர்ந்த மாணிக்கம் – ராதா தம்பதி மகள் அஞ்சுகா. கானாடுகாத்தானில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். சென்ட்ரிங் தொழிலாளியான மாணிக்கம் கடந்த 5 ஆண்டுக்கு முன் இறந்தார். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் படிப்புக்காக வட்டிக்கு ரூ.10 ஆயிரம் பெற்று செல்போன் வாங்கியுள்ளார் அஞ்சுகா. இதற்கு வாரம் ரூ.1,250 என 10 வாரங்கள் கட்ட வேண்டும் என்பதால் பள்ளத்தூர் – திருச்சி பைபாஸ் சாலையில் ஆன்லைன் வகுப்புகளை கவனித்துக் கொண்டே நாவல் பழம் விற்பனை செய்து வருகிறார்.இதுகுறித்து அஞ்சுகா கூறுகையில், ‘‘தந்தை இறந்ததால் நானும், எனது சகோதரரும் நுங்கு, நாவல் பழம் விற்பனை, வயல் வேலைக்கு செல்வது என கிடைக்கும் வேலையை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறோம். ஆன்லைன் கல்விக்காக வாங்கிய செல்போன் கடனை அடைக்க, நாவல் பழம் விற்று வருகிறேன். காலை 6 மணிக்கு நானும், எனது சகோதரரும் கண்மாய் கரையில் உள்ள நாவல் மரத்தில் பழங்களை பறிப்போம். அதன்பின்னர் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாவல்பழம் விற்பனை செய்வேன். விற்கும்நேரம் போக மீதி நேரங்களில், படித்துக் கொள்வேன். தினமும் ரூ.300 வரை கிடைக்கும். குடும்ப செலவு போக மீதம் உள்ளதை வைத்து கடன் அடைப்பேன். நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்பது என் கனவு. ஆனால் டாக்டருக்கு படிக்கும் அளவுக்கு பணம் இல்லை என்பதால் பி.எஸ்சி நர்சிங் படிக்க வேண்டும் என ஆசை’’ என்றார். மாணவியின் உயர்கல்விக்கு உதவ நினைப்போர் 80565 25213 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்….

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்