பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அடுத்த கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ராசப்பன். விவசாயி. இவரது நிலத்தின் பட்டாவில், கோயில் சுவாமிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ராசப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்து, கடந்த 2018ல், ராசப்பனின் நில பட்டாவில் உள்ள சுவாமிகளின் பெயர்களை நீக்கி, தனிப்பட்டாவாக வழங்குமாறு, பரமத்தி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஆணை நாமக்கல் மாவட்ட கலெக்டர், பரமத்திவேலூர் தாசில்தார் மற்றும் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ராசப்பன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும்படி, நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் அரசு தரப்பில் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தராமலும், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமலும் இருந்ததாக நாமக்கல் கலெக்டரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்….