சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா நேற்று மாலை, தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் இபி காலனி, காந்தி சாலை ரோடு, ராதா நகர் மெயின் ரோடு, நியூ செகரட்டரியேட் காலனி, வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். மக்கள் மத்தியில் அசன் மவுலானா பேசுகையில், ‘வேளச்சேரி தொகுதியின் அனைத்து உட்பகுதிகளுக்கும் சென்று வர மினி பஸ் வசதியை ஏற்படுத்துவேன். கஸ்தூரிபாய் மற்றும் காந்தி நகரில் ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவ பரிசோதனை நிலையம் அமைப்பேன். அதில் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்கள் அமைத்து தருவேன். ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள அடிப்படை பிரச்னைகளை கணக்கெடுத்துள்ளேன். அவற்றை சீரமைப்பதே எனது முதல் கடமையாக இருக்கும். எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். உங்களுக்கு சேவை செய்யும் சேவகனாக இருப்பேன்’ என்றார்.திமுக மேற்கு பகுதி செயலாளர் சேகர், பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தம், முருகவேல், பாரதிதாசன், தாமோதரன், மதிவாணன், பாலசதீஷ், தமிழரசு உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர்….