ராமநாதபுரம், ஜூலை 9: ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அரசு உதவி பெறும், தனியார் பள்ளி சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி முன்னிலை வகித்தனர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும். 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் வின்செண்ட் சேவியர் நன்றி கூறினார். உடற்கல்வி இயக்குனர்கள் அன்சாரி, சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.