சென்னை:உக்ரைன் விவகாரத்தில் மாநில ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெசிந்தா லாசரஸ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உக்ரைனில் இருந்து இதுவரையில் 1,800 தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்றுள்ளது. 3,500 மின்னஞ்சல்கள் வந்துள்ளது. உக்ரைன் மாணவர்கள் நேரடியாகவும், அவர்களது பெற்றோர்களும் எங்களுக்கு கோரிக்கைகளை அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள விவரங்களை முதல்வரிடம் கூறியுள்ளோம். முதல்வரும் அங்கிருக்கும் மாணவர்களிடம் நேரடியாக பேசி விவரங்களை தெரிந்துகொண்டுள்ளார். போலந்து, ருமேனியா ஆகிய எல்லைகளில் இருப்பவர்கள் தகவல்களை கொடுத்தால் வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசி அவர்களை அழைத்து வரும் பணியை மேற்கொண்டுள்ளோம். மாணவர்கள் யாரும் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளோம். உக்ரைன் தலைநகரிலும், ரஷ்யாவின் எல்லையிலும் தமிழக மாணவர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிலும் உள்ள பல்கலைக்கழக பேருந்துகள் மூலமாக மாணவர்களை விமானநிலையங்களுக்கு அழைத்துவர திட்டமிட்டுள்ளோம். தமிழக மாணவர்களின் விவரங்களை சேகரித்து அதற்கேற்றவாறு விமானங்களை தயார் செய்கிறார்கள். எஞ்சியுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம். வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலமே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்….