கோவை, ஜன.29: ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பாக ‘தென்னிந்திய தென்னை திருவிழா’ பல்லடத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் குத்து விளக்கேற்றி இத்திருவிழாவை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மேயர் தினேஷ் குமார் பேசியதாவது: தமிழ்நாட்டின் முன்னோடி மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சியை மாற்றுவதற்காக ஏராளமான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இதில் முத்தாய்ப்பாக திருப்பூரை பசுமை மாநகராட்சியாக மாற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் விவசாயத்தின் கஷ்ட நஷ்டங்கள் எனக்கு தெரியும். ஒரு மேயராக நான் உங்களுக்கும் (விவசாயிகளுக்கும்) அரசிற்கும் ஒரு பாலமாக இருந்து உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். இதில், தமிழக உழவர் நலச்சங்கத்தின் தலைவர் செல்லமுத்து, வனம் இந்தியா அறக்கட்டளை சுந்தரராஜன், மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.