ஈரோட்டில் நாய் குட்டிகளை விஷம் வைத்து கொன்ற கொடூரம்

 

ஈரோடு, செப்.14: ஈரோட்டில் அடுத்தடுத்து நாய் குட்டிகளை விஷம் வைத்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி வருகிறது. ஈரோடு, காளைமாட்டு சிலை அருகில் உள்ளது ஈஸ்வரன் வீதி. இப்பகுதியில் ஒரு பெண் நாய், தான் ஈன்ற 6 குட்டிகளுடன் சுற்றி வந்தது. பிறந்து ஒரு மாதமான நாய் குட்டிகளில் நேற்று முன்தினம் காலை ஒரு குட்டியும், மாலை ஒரு குட்டியும், மீண்டும் நேற்று காலை ஒரு குட்டியும் அப்பகுதியில் உள்ள குப்பை தொட்டியின் அருகில் அடுத்தடுத்து இறந்து கிடந்தன.

அப்பகுதியைச் சேர்ந்த யாரோ அடுத்தடுத்து அந்த நாய் குட்டிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்து குப்பைத் தொட்டியின் அருகில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். 6 நாய் குட்டிகளில் 3 நாய் குட்டிகள் அடுத்தடுத்து இறந்துள்ள நிலையில், மீதமுள்ள நாய் குட்டிகளும் அடுத்தடுத்து கொல்லப்படுமா ? என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒரு மாதமே ஆன நாய் குட்டிகளை விஷம் வைத்து கொன்று வீசும் நபர்கள் யார்? என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் யாரேனும் இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்