ஈரோடு மாநகருக்குள் ‘பீக் அவர்சில்’ கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

ஈரோடு, செப். 18:ஈரோடு மாநகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈவிஎன் சாலை, காந்திஜி சாலை, கச்சேரி சாலை, ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை, சத்தி சாலை, பெருந்துறை சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதில் ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் மாநகரில் வாகன போக்குவரத்து அதிகளவு காணப்படும். இந்த பீக் அவர்சில் ஏற்படும் வாகன போக்குவரத்தினை கட்டுப்படுத்த மாவட்ட போலீசார் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சரக்கு ஏற்றி வரும் லாரி போன்ற கனரக வாகனங்கள் மாநகருக்குள் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ‘பீக் அவர்ஸ்’ தடையை மீறி கனரக வாகனங்கள் சமீபநாட்களாக மாநகருக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து பீக் அவர்சில் வரும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு எஸ்பி ஜவகர், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில், ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் வழிகாட்டுதலின்பேரில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ், பீக் அவர்சில் மாநகருக்குள் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இந்நிலையில், ‘பீக் அவர்ஸ்’ தடை குறித்து கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், கருங்கல்பாளையம் போலீஸ் சோதனை சாவடி, வீரப்பன் சத்திரம், திண்டல், சோலார், மூலப்பாளையம் போன்ற இடங்களில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை பதாகையில், ‘கனரக வாகனங்கள் ஈரோடு மாநகரத்திற்குள் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செல்ல தடை’, ‘மீறினால் அபராதம் விதிக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி