ஈரோடு, செப்.24: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், கொங்கு முன்னணி நிர்வாகிகள் கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேலம்-கோவை, கோவை-சேலம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் சித்தோடு வழியாக உள்ளே வந்து செல்ல வேண்டும் என வழித்தடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரோடு, பவானி, கவுந்தப்பாடி, கோபி உட்பட பல்வேறு பகுதியினர், சித்தோடு பகுதியில் ஒன்று கூடும் இடமாகவும், மைய பகுதியாகவும் உள்ளது.
சித்தோடு கோபி சாலையில் சிறிது தூரத்தில் பைப்பாஸ் நான்கு வழிச்சாலை அமைந்துள்ளதால், பஸ்கள் அனைத்தும் சித்தோடு நகரப் பகுதிக்கு வராமல் பைப்பாஸ் சாலை வழியாக செல்கின்றன. இதனால், சித்தோடு பஸ் நிறுத்தம் என கேட்கும் பயணிகளை பஸ்சில் ஏற்ற மறுக்கின்றனர். இன்னும் சில பஸ்களில் பகல், இரவு என எந்நேரமும், பைப்பாஸில் வெகு தூரத்தில் இறக்கி விட்டு செல்வதால், பொதுமக்கள், பயணிகள் அச்சம் அடைகின்றனர்.
மேலும், ஈரோடு, கோபி உட்பட பல்வேறு பகுதிக்கு கோவை, சேலம் மார்க்கமாக வருவோர், சித்தோட்டில் இறங்கி செல்வதும் குறைந்த நேர பயணமாக இருந்தது. எனவே, மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகம் ஆகியவை இணைந்து, சித்தோடு நகர் பகுதிகள் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.