ஈரோடு : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு கடை வீதிகளில் ஜவுளி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பண்டிகையையொட்டி ஜவுளிக்கடைகளில் தீபாவளி விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. இதில், ஈரோடு மாநகர் கடை வீதிகளில் உள்ள பல்வேறு ஜவுளி கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகை விலையில் ஜவுளிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், கடைவீதிகளில் உள்ள ஜவுளி கடைகளுக்கு மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து புத்தாடைகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று ஈரோடு கடைவீதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில், ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, கனி மார்க்கெட், திருவேங்கடசாமி வீதி, பிரப் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது. இதனால், கடை வீதிகளில் ஆர்.கே.வி. ரோட்டில் கனரக வாகனங்களான லாரி, பஸ் செல்ல தடை விதிக்கப்பட்டு, இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வாகனங்களும் மக்கள் கூட்டத்தில் ஊர்ந்து சென்றன.போலீஸ் பாதுகாப்புஈரோடு மாநகர் கடை வீதிகளில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் ஆங்காங்கே நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூட்டத்தையும், வாகன போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டத்தையும் காண முடிந்தது. மேலும், ஒலி பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விழிப்புணர்வு செய்தனர்….