கொடுமுடி, ஜூலை 10: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுமுடி தீயணைப்பு துறை சார்பில் காவேரி ஆற்றில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடி தாசில்தார் பாலமுருகாயி தலைமை வகித்தார். கொடுமுடி தீயணைப்பு மீட்பு பணி நிலைய பொறுப்பு அலுவலர் மலைக்கொழுந்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். இதில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் நீரில் மூழ்கி விடாமல் உயிரை காப்பற்றிக்கொள்வது எப்படி? என்பது குறித்து தீயணப்பு வீரர்கள் விழிப்புணர்வு பயிற்சி செய்து காட்டினர். மேலும், வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்தும், அவர்களுக்கு முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பேரிடர் தடுப்பு ஒத்திகை செய்து காட்டினர். இதில், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஒத்திகையை பயிற்சி கண்டு பயன் அடைந்தனர்.