இ-சாதிச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, ஜூன் 20: நரிக்குறவர், நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருந்தால் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பழங்குடியினர் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர்கள், சப் கலெக்டர்கள், நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் மின் வடிவிலான முறையில் பெற்றுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு புதிய மின் வடிவிலான சாதிச்சான்றிதழ் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அட்டை வடிவிலான சாதிச்சான்று வைத்துள்ளவர்களின் சாதிச்சான்றிதழை ரத்து செய்து பழங்குடியினர் சாதிச்சான்றுகள் வழங்குவது தொடர்பாக, புதிய இணைய தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் சமுதாயத்திற்கு மாற்றப்படுவதாக ஒன்றிய அரசால் அரசிதழ் வெளியிடப்பட்ட ஜனவரி 3ம் தேதியிலிருந்து நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள். எனவே புதியதாக குருவிக்காரன், நரிக்குறவன் சான்று பெற தகுதியான நபர்கள் ஆதார ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்று அட்டை வடிவில் வைத்துள்ளோர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து இ-சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை தாசில்தார்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவர் நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஆர்டிஓ தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை