டெல்லி : இழப்புகளை ஈடு செய்ய மின் நுகர்வு கட்டணத்தை உயர்த்த மின்சார விநியோக நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருப்பதால் நாடு முழுவதுமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்படும் நிலை உருவாகி உள்ளது. நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு மின்துறை அமைச்சகம் அளித்து இருக்கும் விளக்க குறிப்பில், பல்வேறு மாநில மின்சார விநியோக நிறுவனங்கள் தாமதமான கட்டண விவரங்களை தாக்கல் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. பல மாநில பகிர்மான நிறுவனங்கள், செலவுகளை பிரதிபலிகாத கட்டண விவரங்களை அளித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 17 மாநிலங்கள் மட்டுமே 2021, 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட கட்டண விவரங்களுடன் ஆர்டர்களை அளித்து இருப்பதாக கூறியுள்ளது. 12 மாநிலங்கள் 2021 ஏப்ரல், நவம்பர் மாதங்களுக்கு இடையே ஆர்டர் விவரங்களை தந்து இருப்பதாகவும் 7 மாநிலங்கள் கட்டண விவரங்களை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையில் மின்சாரம் வழங்க விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடும் மாநில அரசுகள், மானியங்களை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகளின் கடன் பாக்கி, ரூ.59, 489 கோடியாக அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இதில் மிக மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட மின் பகிர்மான கழகங்கள் அதிக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் அவற்றின் வட்டி சுமை அதிகரிப்பதாகவும் நாடு முழுவதுமாக 29 மின் விநியோக நிறுவனங்கள், எதிர்மறை நிகர மதிப்பை கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 -2020ம் ஆண்டில் மட்டும் 5.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதே கால கட்டத்தில் மின் விநியோக நிறுவனங்கள் 4.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மின் விநியோக நிறுவனங்களின் மோசமான பில்லிங் மற்றும் வசூல் திறன் நிதிநிலை மோசம் அடைய ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளது. எனவே அதிகரித்து வரும் செலவீனங்களை சமாளிக்க மின்விநியோக நிறுவனங்கள் சரியான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை மாநிலங்கள் முழுவதுமாக ஏற்றுக் கொண்டால், நாடு முழுவதும் மின் கட்டணம் உயரும் நிலை உருவாகும். …