இளையான்குடி அருகே மோடி காப்பீடு பெயரில் பாஜ உறுப்பினர் சேர்க்கை: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

இளையான்குடி: இளையான்குடி பகுதியில் பிரதமர் மோடி காப்பீடு திட்டம் என்ற பெயரில், ஆன்லைனில் பாஜ உறுப்பினர் சேர்க்கைக்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலைக்கிராமம், வடக்கு சாலைக்கிராமம், குயவர்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பாஜ கட்சியினர், பிரதமர் மோடி மருத்துவ காப்பீடு என்று ஆன்லைனில் உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர். நேற்று பாஜவைச் சேர்ந்த லதா, இப்பகுதிகளில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். இதற்காக ரேஷன் கார்டு, ஆதார் எண் சேகரிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பதிந்தவுடன், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் செல்லுக்கு ‘ஓடிபி’ எண் வருகிறது.அந்த ஓடிபி எண்ணை பதிந்தவுடன் பொதுமக்களின் எண்ணிற்கு வரும் எஸ்எம்எஸ்சில் ‘நீங்கள் பாஜவில் ஏற்கனவே உறுப்பினராக உள்ளீர்கள். உங்களுடைய விவரங்களை கீழ்க்கண்ட இணைப்பில் பதிவு செய்யுங்கள்’ என ஒரு லிங்க்கும்,  ‘உங்களுடைய பெயர், முகவரி, உள்ளிட்டவைகளை எஸ்எம்எஸ் செய்யவும்’ என ஒரு எண்ணும் வருகிறது. ஆனால் மோடி காப்பீடு என்றோ, மருத்துவம் மற்றும் அதற்கான விவரங்களோ அந்த எஸ்எம்எஸ்சில் இல்லை.அதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜ ஒன்றியச் செயலாளர் ராஜபிரதீப், திமுக ஒன்றியச் செயலாளர் செல்வராசன் ஆகியோர் கட்சியினருடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு திமுக மற்றும் பாஜவினருக்கு இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சாலைக்கிராமம் போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்….

Related posts

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்

நூதன திருட்டு: போலியான இமெயில் அனுப்பி பணம் பறிப்பு… மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !