குடியாத்தம், ஜூன் 20: குடியாத்தத்தில் இளம்பெண் தனது 2 மகள்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியாத்தம் பெரும்பாடி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு 2 மகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் முன்விரோதம் காரணமாக இளம்பெண்ணிடம் தொடர்ந்து வீண் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்றும் தகராறு செய்ததால் வேதனையடைந்த இளம்பெண் தனது 2 மகள்களுடன் குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் தலைமை காவலர் தாமரை சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்த இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, இரு குடும்பத்தினரையும் அழைத்து விசாரணை நடத்தி சமாதானம் செய்தார். இந்த மறியலால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விசாரணை நடத்தி வருகிறார்.