கீழக்கரை, செப்.12: புதுச்சேரியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர், 8 மாதங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(19) என்பவரை திருமணம் செய்தார். தற்போது கீழக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் சுபாஷ் வேலை பார்த்து வருகிறார். நகரில் உள்ள 500 பிளாட் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி ஐஸ்வர்யாவுடன், சுபாஷ் வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஓட்டலுக்கு வேலைக்குச் சென்ற சுபாஷ் மாலையில் வீடு திரும்பியபோது கதவு பூட்டிக் கிடந்துள்ளது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சுபாஷ், மனைவியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துள்ளதால், ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.