இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம் கணவரே அடித்து கொன்றது அம்பலம்

திருப்பூர்: பூரி கட்டையால் அடித்து மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி காமராஜ் வீதியை சேர்ந்தவர் விஜயன் (35). இங்குள்ள பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா (30). இவர்களுக்கு  2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் விஜயன் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவிநாசி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘‘வீட்டில் தனியாக இருந்த எனது மனைவி பிரியாவை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்’’ என கூறியிருந்தார்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது பிரியாவின் தாடை மற்றும் கழுத்து பகுதிகளில் காயம் இருந்தது. அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன. இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பிரியாவின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வீட்டருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இது தவிர அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் வீட்டுக்குள் வந்ததிற்கான எந்த தடயங்களும் சிக்கவில்லை. ஆனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் சந்தேகப்பார்வை பிரியாவின் கணவர் மீது திரும்பியது. அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் மனைவியை கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.வழக்கம்போல் சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் ஆத்திரமடைந்த விஜயன், அங்கு கிடந்த பூரிக்கட்டையை எடுத்து மனைவியை தாக்கியுள்ளார். இதில் தாடை, கழுத்து பகுதியில் பலத்த காயத்துடன் பிரியா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை, கொள்ளை நாடகமாடி தப்பிக்க விஜயன் முடிவு செய்தார். அதன்படி மனைவியின் கழுத்தில் கிடந்த நகைகளை கழற்றிவிட்டு மனைவியை கொன்றுவிட்டு கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து சென்றதாக விஜயன் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் விஜயன்தான் கொலையாளி என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விஜயனை கைது செய்தனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்