ஈரோடு,ஜூன் 5: ஈரோடு பெரியசேமூர் கள்ளான்காடு பகுதியை சேர்ந்த நாகராஜ் மகள் மீனா(23). இவருக்கு கடந்த ஆண்டு முருகன்நாதன் என்பவருடன் திருமணம் ஆனது. மீனாவுக்கும், அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில், கடந்த 15 நாட்களுக்கு முன் மீனா, அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெரியசேமூரில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த 2ம் தேதி மீனா வீட்டில் இருந்து வெளியேறியவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கம், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் மீனா கிடைக்கவில்லை. இதுகுறித்து மீனாவின் தந்தை நாகராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில், மாயமான மீனாவை தேடி வருகின்றனர். இதேபோல், பெருந்துறை குன்னத்தூர் சாலையை சேர்ந்த 17வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்க போவதாக கூறியதால், அப்பெண் தான் படிக்க போவதாக கூறி வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, அவரது பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் மாற்று சான்றிதழ் எடுத்துக் கொண்டு வெளியேறினார். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் மாயமான அப்பெண்ணை தேடி வருகின்றனர்.