Friday, July 5, 2024
Home » இலையோடு ஒட்டிய மாம்பழத்தால் திண்டிவனம் தோட்டத்தில் சூறாவளி வீசியதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இலையோடு ஒட்டிய மாம்பழத்தால் திண்டிவனம் தோட்டத்தில் சூறாவளி வீசியதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by kannappan

‘‘ராமநாதபுரத்தில் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பதினைந்து கோடிக்கும் மேலே முறைகேடு செய்த அதிகாரி நடுக்கத்தில் இருக்கிறாராமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர், நில வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  கடந்த ஓராண்டில் ஐம்பது கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளில் ₹15 கோடிக்கு  மேல் முறைகேடு நடந்திருப்பதாக புகார் இருக்கிறதாம். கடற்கரையோரம்  தடுப்புச்சுவர், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் ₹10 கோடியில்  குடிமராமத்து புனரமைப்பு பணி என நடந்த வளர்ச்சிப்பணிகள், தொடங்கிய சில  மாதங்களில் மழைக்காலம் துவங்கியதால் கிடப்பில் போடப்பட்டு விட்டதாம். மழையால் நிரம்பிய கண்மாய் கரைகளை மட்டும் மேம்படுத்தி விட்டு, குடிமராமத்து  முழுமை அடைந்ததாக கூறி ஒவ்வொரு பணியிலும்  இருபது சதவீதத்திற்கும் மேல் பணம்  முறைகேடு நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்கள் நேர்மையான சில  அதிகாரிகள். ஒரு சில இடங்களில் நடந்த பணிகளை, ‘‘உதவி அதிகாரி’’ ஒருவரே,  பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பணியை நிறைவேற்றாமல் திட்ட மதிப்பீட்டில்  பாதித்தொகையை சுருட்டிக் கொண்டாராம். இப்பணிகளில் பதினைந்து கோடிக்கு மேல்  முறைகேடு அரங்கேறி இருக்கிறதாம். இது மட்டுமல்ல… மாவட்டத்தில் கடந்தாண்டு  நடந்த குடிமராமத்து பணிகளில் பெரும்பாலும் காட்டு கருவேல மரங்களை மட்டும்  அப்புறப்படுத்தி, நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் கண்மாய் கரைகள்  மட்டும் மேம்படுத்தி, அரசு பணம் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறதாம்.  தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால், நடவடிக்கைகள் இருக்குமோ என்ற  அச்சத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் பெரும் கலக்கத்தில்  இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘அதிகாரிகள் இன்னும் மாறாமல் இலை பாசத்தில் இருப்பதை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘சிமென்ட்  மாவட்டத்தில் கடந்த இலை ஆட்சியில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவர்  தாமரையானவர். இவர் எம்எல்ஏவாக இருந்த போது   நேர்மையான அதிகாரிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டிய அதிகாரிகளை பணியில்  அமர்த்தி கல்லா கட்டினாராம். இதனால் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பல கோடி  டெண்டரை இவர் ஒருவரே எடுத்து கரன்சியாக குவித்தாராம். தாமரையானவரிடம் கமிஷன் பார்த்த அதிகாரிகள் தற்போது ஆட்சி  மாறியும் அவருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றார்களாம். கடந்த சில தினங்களுக்கு  முன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தலைமையில் அனைத்து துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அந்த கூட்டத்தில் ஆட்சி  மாறினாலும் இம்மாவட்டத்தில் காட்சிகள் மாறவில்லை… அதிகாரிகள் மாறவில்லை.. பல்வேறு அரசு துறையில்  கமிஷன் பார்த்த அதிகாரிகள் கடந்த ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்த  தாமரையானவருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் போக்கை  மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சி எம்எல்ஏ கறாராக தெரிவித்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘விழுப்புரத்துல மழை பெய்த நேரத்தில் திண்டிவனத்தில் இடி இடித்த கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரத்தில் எக்ஸ் மினிஸ்டர் தலைமையில் நடந்த அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் மாங்கனி எம்எல்ஏ பங்கேற்றது தைலாபுரம் ேதாட்டத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்காம்.   முன்னாள் லா மினிஸ்டர் தோல்விக்குப்பின் வெளியில் தலை காட்டவில்லையாம்.‘‘அவரா கண்டா வரச்சொல்லுங்கன்னு” விமர்சனங்கள் எழுந்தநிலையில்,   ஒருமாதம் கழித்து கட்சி அலுவலகத்திற்கு வந்தாராம் எக்ஸ்மினிஸ்டர். கட்சி   நிர்வாகிங்களோடு ஆலோசனைக்கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும்போது, அங்குவந்த மயிலம் தொகுதி மாங்கனி எம்எல்ஏ, எக்ஸ்மினிஸ்டரிடம் வாழ்த்துபெற்று அக்கட்சி   ஆலோசனைக்கூட்டத்திலும் பங்கு பெற்றாராம். விடாமல், அக்கட்சியின்   உள்விவகாரங்கள் குறித்து பேட்டியளிக்கும் நிகழ்ச்சியிலும், எக்ஸ்மினிஸ்டரோடு  ஒருங்கிணைந்து விட்டாராம். இந்த விவகாரம், தைலாபுரம்  தோட்டத்திற்கு செல்ல, எம்எல்ஏ மீது அதிருப்தியில இருக்காங்களாம்.  சமூகவலைதளங்களில் மயிலம் தொகுதியில் எப்ப வேண்டுமானாலும் இடைத்தேர்தல்  நடத்த எக்ஸ்மினிஸ்டர்  திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவிக்கொண்டிருக்க, மாங்கனி எம்எல்ஏ அக்கட்சியில்  ஐக்கியமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதாம். அநேகமாக கட்சி நடவடிக்கை பாயும் என்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவை காவல் துறை அதிகாரியின் தாராள மனதை பற்றி சொல்லுங்க…’’ சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை தடாகம் ரோடு கோவில்மேடு பகுதியில்  செக்போஸ்ட் அருகே டாஸ்மாக் கடை,  துடியலூர் காவல் எல்லைக்குள் உள்ளது. ஆனாலும், சாயி பாபா காலனி காவல் நிலைய அதிகாரி ஒருவர், இந்த டாஸ்மாக் கடையை ஒட்டி ‘பார்’ ஏலம் எடுத்த நபரை கைக்குள் போட்டுக்கொண்டு, கள்ளச்சந்தையில் சரக்கு விற்க, கிரீன் சிக்னல் கொடுத்து வருகிறார். அதாவது, ‘’டாஸ்மாக் கடையில் இருந்து சரக்கை எடுத்து, ‘பார்’ வளாகத்தில் ரகசியமாக வைத்து வித்துக்கோ… ஆனால், ஒரு கண்டிசன், எனக்கு தினமும் ₹2 ஆயிரம் மாமூல் வந்திரனும்…’’ என வாய்மொழி உத்தரவு போட்டுள்ளார். அதன்படி, ‘பார்’ வளாகத்தில் சரக்கு விற்பனை சக்கைப்போடு போடுகிறதாம்… காவல் துறையில் உள்ள நேர்மையான சிலர் இதுபோன்ற நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையோடு சொல்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா           …

You may also like

Leave a Comment

one × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi