Wednesday, July 3, 2024
Home » இலையும் தாமரையும் மோதி கொண்ட ரகசியத்தை சொல்கிறார்

இலையும் தாமரையும் மோதி கொண்ட ரகசியத்தை சொல்கிறார்

by kannappan

தேனி விவிஐபியின் வாரிசை யார் வறுத்தெடுத்தாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தேனி நகருக்கான புதிய ரயில்சேவை தொடக்க விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், இலைக்கட்சியின் தேனி விவிஐபியின் மகனும் மக்கள் பிரதிநிதியுமானவர் பங்கேற்றாராம். ரயில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற இலை கட்சிக்காரர்கள் மற்றும் தாமரை கட்சியினர் காதுபட, என் முயற்சியால்தான் தேனிக்கு ரயிலே வருது… இன்னும் பல திட்டங்களை ஒன்றிய அரசிடம் பேசி வாங்கி வருவேன் என்று சொல்லி சிலாகித்தாராம். அப்புறம், தேனி விவிஐபியின் மகனை பாராட்டியும், வாழ்த்தியும், வரவேற்றும் இலைக்கட்சியினர் ரயில் நிலையம் வரையிலும் கட்சிக்கொடி கட்டி அசத்திட்டாங்க. இதைப்பார்த்த தாமரை கட்சிக்காரங்க, நாங்க இல்லாட்டி எப்படி ரயில் வந்திருக்கும்… எங்களால தான் ரயில் வந்ததுன்னு சொல்லி அவங்களும் கட்சி பேனர்கள், கொடிகளை ரயில் நிலையம் வரைக்கும் கட்டினாங்களாம். கொடி கட்டுவதிலும், பேனர் வைப்பதிலும் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டியாம். நிகழ்ச்சி நடந்த மேடையில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதையும் தவிர்ப்பதுபோல நடந்து கொண்டார்களாம். தொண்டர்களோ, விவிஐபியின் மகனை பாராட்டி கோஷம் போட்டபடியே இருந்தாங்க. இதை பார்த்த தாமரைக்கட்சிக்காரங்க, இலைக்கட்சியினரை காட்டிலும், தாமரைக்காரர்கள் அதிகளவில் ஆட்களை இறக்கி கொடிகளை பிடிக்க வைத்து தேனி விவிஐபியின் மகனுக்கு பதிலடி கொடுத்தாங்களாம்.  அப்புறம் தாமரை கொடிகளைக் கையில் வைத்தபடி நிகழ்ச்சி முடியும் வரை கோஷமிட்டபடியே இருந்தாங்க. இது இலைக்கட்சியினரை ரொம்பவே டென்ஷனாக்கிருச்சாம்.. ‘எங்க தயவால தான் தாமரையே தமிழகத்தில் மலர்ந்திருக்கு. இவங்க என்னடான்னா ரொம்பத்தான் துள்ளுறாங்க ’ என இலைக்கட்சியினர் கொந்தளிச்சாங்களாம். அதை கேட்டு சிரித்தபடியே பாரத மாதா கீ ஜெ என்று சொல்லி இலை ெதாண்டர்களை மேலும் கடுப்பேற்றினார்களாம். இது குறித்து அறிந்த காக்கிகள் இரண்டு தரப்பையும் தந்திரமாக சம்பவ இடத்தில் இருந்து வெளியேற்றி சமாளித்தார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘முட்டை மாவட்டத்தின் ஸ்பெஷல் சமாச்சாரம் ஒன்றை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முட்டை  மாவட்டத்திலுள்ள கொல்லிஹில்சில் சமீபத்தில் நடந்த பப்ளிக் எக்ஸாமில்  ஸ்டூடன்ஸ் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் வைத்திருந்தது பரவலாக பேசப்பட்டது.  தலைமையிடத்தில் இருந்து ஆய்வுக்கு வந்த ஹையர் ஆபீசரு ஒருத்தரு தான், தனக்கு  நெருக்கமான மீடியாக்களிடம் பேசி தகவலை கசியவிட்டாரு என்பது ஹாட் டாபிக்கா  மாறிச்சு. அதோடு அந்த ஆபீசரு பிறமாவட்டங்களில் இருந்து தனது அபிமானிகளான  டீச்சர்களை பறக்கும்படை மெம்பர்களாக்கி ஆய்வுக்கு அனுப்பியதும் சர்ச்சையை  கிளப்பிச்சு. லோக்கல் டீச்சர்சை மட்டம் தட்டவே இப்படி செய்யுறாரு என்று  உள்ளூர் ஆபீசருங்க பொங்கி எழுந்தாங்களாம். இதனால் அதிர்ச்சிக்குள்ளான  ஹையர் ஆபீசரு, எக்ஸாம் முடிஞ்சதும்  திடீரென ஹெட்மாஸ்டர்ஸ், டீச்சர்ஸ்  மீட்டிங்கை நடத்தினாராம். இந்த மீட்டிங்கில் என்ன நடக்குமோ என்ற  கொஸ்டீனோடு எல்லாரும் போனாங்களாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஹை ஆபீசர்  உருக்கமாக பேசினாராம். என்னை பற்றி யார் தகவல் கொடுத்தார்கள் என்பதெல்லாம்  எனக்கு நல்லாவே தெரியும். ஆனால் நான் டீச்சர்ஸை ரொம்பவும் மதிப்பவன்.நான்  ஒர்க் பண்ணின மாவட்டத்துல எல்லாம் என்னைப்பற்றி கேட்டுப்பாருங்கள்.  ஏதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக நான் வந்து நிற்பேன். ஹெல்ப்  தேவைப்பட்டால் எனி டைம் என்னை அழையுங்கள் என்று கூறி தனது செல்போன் நம்பரை  கொடுத்து அனுப்பி வச்சாராம். இது கடுப்பில் இருந்த முட்டை மாவட்ட  டீச்சர்களை கொஞ்சம் கூலாக்கி இருக்காம். அது சரி எதுக்காக திடீர் கூட்டத்தை  ஆபீசரு போட்டாரு என்பது மட்டும் கடைசிவரைக்கும் புரியாத புதிராகவே  இருந்ததாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘நாகர்கோவில் என்றாலே மாநகராட்சி பிரச்னை ஓயாது போலிருக்கே…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ நாகர்கோவில்  மாநகராட்சி புதிய கட்டிடம் பெயர் சூட்டுவது தொடர்பாக இருந்த சர்ச்சை  ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஒப்பந்தக்காரர் பிரச்னை  விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த கட்டிடம் கட்டுமான பணிக்கு மதுரையை சேர்ந்த  ஒப்பந்தக்காரர் ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். அவர் குமரி மாவட்டத்தை  சேர்ந்தவருக்கு கட்டுமான பணிகள் தொடர்பாக துணை ஒப்பந்தம்  செய்து கொண்டதாகவும், இதில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட  பிரச்னை நிலவி வந்த நிலையில் குமரி கான்டிராக்டர் திடீரென்று புதிய  மாநகராட்சி கட்டிடம் முன்பு குடும்பத்தினருடன் திடீர் போராட்டம் நடத்தி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய பிரச்னை மாநகராட்சி கட்டட விவகாரத்தில்  மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொடுக்கவில்லை என்றால் மெயின் கான்டிராக்டரை கேட்காமல்… மாநகராட்சி முன்பு வந்து போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்று ஊழியர்கள் பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.    …

You may also like

Leave a Comment

eighteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi