ராமேஸ்வரம், ஜூன் 4: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுர் பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி சீட்டு மீண்டும் வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில்வேல் தலைமையில் ராமநாதசுவாமி கோயில் அதிகாரியிடம் நேற்று அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில், ராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ளூர் மக்கள் பாரம்பரிய வழிபாட்டு உரிமையை காக்கும் விதமாக கோயில் நிர்வாகம் இலவச தரிசன அனுமதி சீட்டுகளை வழங்கி வந்தது.
ஆனால் அவை நிறுத்தப்பட்டு அரசியல்வாதிகள் மற்றும் விஐபிகளுங்கு மட்டும் வழங்கப்படுகிறது. மேலும் சில ராமேஸ்வரம் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் அதே அனுமதி சீட்டுகளை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தை சார்ந்த உள்ளுர் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன அனுமதிச் சீட்டு வழங்க வேண்டும். மேலும் இலவச அனுமதி சீட்டுகளை விற்பனை செய்யும் தேவஸ்தான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.