ராமேஸ்வரம்,செப்.27: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட, விசைப்படகு மீனவர் நேற்று தங்கச்சிமடம் திரும்பினார். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23ம் தேதி விசைப்படகில் சகாய ராபர்ட், யாகோப், முத்துராமலிங்கம், ராதா, சேகர் ஆகிய 5 மீனவர்களும் கடலுக்கு சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆக.29ம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றம் மீனவர் சகாய ராபர்ட் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டதால் அவருக்கு 18 மாதம் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதித்தும், 4 மீனவர்களும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இலங்கையில் செப்.12ம் தேதி தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு, கொழும்பு வெளிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த சகாய ராபர்ட் விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு மீனவர் சகாய ராபர்ட், நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து மீனவளத்துறை அதிகாரிகள் அவரை சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.