Thursday, July 4, 2024
Home » இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம்

by kannappan

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியள்ள கடிதம்: கோடியக்கரை கிராமத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் கடந்த 17ம் தேதி கோடியக்கரை கடற்கரையிலிருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது. இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத சிலர் தாக்குதல் நடத்தி தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான ஜி.பி.எஸ் கருவி, மீன்பிடிச் சாதனங்கள், எரிபொருள் மற்றும் 2மொபைல் போன்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆறு தமிழக மீனவர்கள் கடந்த 18ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள மயிலாட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சகத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளையும், ஆதரவையும் பாராட்டுகின்ற அதேவேளையில், இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 30 நாட்களில் நடைபெற்ற 4 சம்பவங்களில் 7 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டு தமிழ்நாட்டைச் சார்ந்த 47 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவங்கள் நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் உள்ள, பாக் வளைகுடா பகுதியில் பாரம்பரிய மீன்படித் தளங்களை நம்பியுள்ள ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தாக்குதல் நடத்துவதும் அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது.  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்குமான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கும் ஏதுவாக இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் உள்ளவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இன்று வரை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் 29 மீனவர்களும், 82 மீன் பிடி படகுகளும் உள்ளன. எனவே இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் மற்றும் அவர்களது உடைமைகளை விரைவில் விடுவிக்க நீங்கள் இவ்விவகாரத்தில் அவசரமாகத் தலையிட வேண்டும்….

You may also like

Leave a Comment

17 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi