வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலத்தில் ஊரில் யார் இறந்தாலும் ஒரே ஒரு மாலை மட்டும் தான் போட வேண்டும் என்று கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் 2ம் சேத்தி ஊராட்சியில் சாந்தான்வெளி, அகரம் பகுதியில் இறப்பவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்வது மற்றும் மாலை போடுதல் தொடர்பாக சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் கூடி கூட்டம் நடத்தினர்.கூட்டத்தில் பொதுவாக இல்லங்களில் மரணம் ஏற்படும்போது கிராமத்தினர் சார்பில் ஒரு மாலை மட்டும் அணிவித்து இறுதி சடங்குகள் செய்வது, இறப்பு செய்தி அறிவிக்கும்போதே மாலையை தவிர்க்கவும் என ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என்றும் ஊர்மக்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்துள்ளனர். மாலை வாங்க வசதியற்றோர் துயர நிகழ்வுக்கு வர இயலாத நிலையை தவிர்க்க வேண்டும், வசதிக்கு ஏற்றவாறு சிறியது முதல் பெரிய மாலைகள் போடும்போது ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பதற்காக இந்த முடிவை அந்த கிராம மக்கள் எடுத்துள்ளனர்.ஊர்மக்கள் சார்பில் இறந்தவருக்கு ஒரு மாலை மட்டுமே அணிவிக்க வேண்டும். டிரம்செட் வைக்க கூடாது. மாலைக்கு பதில் இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.200 வழங்க வேண்டும். அந்த தொகையில் இறுதிச்சடங்கை நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இறுதி சடங்கின்போது வசூல் செய்யப்படும் பணத்தை வசதி படைத்தோர் தங்களுக்கு இந்த பணம் வேண்டாம் என்று தவிர்க்கும்பட்சத்தில் அதை ஊரார்கள் ஒன்று சேர்ந்து ஏழ்மையான குடும்பத்தில் நிகழும் இறப்புக்கு செலவு செய்யப்படும் என்று முடிவெடுத்துள்ளனர். இறந்த நபர்களுக்கு மாலை போடும் விஷயத்தில் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தினர் எடுத்த முடிவு இணையதளத்தில் வைரலாகி உள்ளது….