பொன்னேரி: இறால் பண்ணை கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி அடுத்த சிறுலப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். ஆனால் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து கிராம மக்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினருடன் இணைந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்தனர். மேலும், உடனடியாக விவசாயத்தையும், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் இறால் பண்ணை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். தகவலறிந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் கழிவுநீர் வெளியேற்றும் இறால் பண்ணை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….