இரிடியம் வியாபாரத்தில் முதலீடு செய்தால் ரூ.1 கோடி தருவதாக கூறி ரூ.18 கோடி மோசடி: 5 பேர் கைது

சென்னை: சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சலபதி (53). அக்கரையில் உள்ள இவரது சொகுசு விடுதிக்கு 10 நாளுக்கு முன் வந்த 5 பேர், ஒரு மாதத்திற்கு வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இவர்களை பார்ப்பதற்காக, தினமும் 10க்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். இதனால்,  சந்தேகமடைந்த சலபதி நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சொகுசு விடுதிக்கு சென்று சோதனையிட்ட போது, வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்காக இன்டர்வியூ நடந்துகொண்டிருந்தது. உடனே, அங்கிருந்த 5 பேரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  விசாரித்தனர். இவர்கள் 5 பேரும் இரிடியம் வியாபாரம் செய்வதும்,  இவர்கள்,  திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார், ராஜா, கோயம்புத்தூரை சேர்ந்த மோகனகுமார், சரவணன், முசிறியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் தெரிய வந்தது. மேலும், இன்டர்வியூக்கு வந்தவர்களிடம், தாங்கள் ஜெர்மனி வங்கியில் ஏராளமான இரிடியம் வைத்திருப்பதாகவும்,  தலா 10,000 முதலீடு செய்தால், நாளடைவில் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி உள்ளனர். அதன்படி, ஏஜென்ட்கள் மூலம், இதுவரை 21 ஆயிரம் பேரிடம் தலா 10 ஆயிரம் பெற்று வியாபாரத்தில் முதலீடு செய்து,  இரிடியம் பிசினஸ் மூலம் வரும் லாபத்தில் ஒவ்வொருவருக்கும் 1 கோடி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார்  ரூ.18 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதையடுத்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று அவர்களை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான காயத்ரி என்ற கூட்டாளியை தேடி வருகின்றனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது