மேட்டுப்பாளையம், ஏப்.4: மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானை,மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன.கோடை வெயிலின் தாக்கம் தற்போது தமிழகத்தில் அதிகரித்திருக்கும் வேளையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மனித – வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், வனப்பகுதியினை ஒட்டி உள்ள சாலைகளில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளின் மீது மோதி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தேக்கம்பட்டி ஊராட்சியின் வார்டு உறுப்பினர் சாகுல் ஹமீது கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் மீது புள்ளி மான் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
எனவே,இரவு நேரங்களில் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் “வனவிலங்குகள் நடமாடும் பகுதி. கவனமாக செல்லவும்” என்பது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும்.அதே போல் சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் இரு மாதங்களுக்குப் பின்னர் ஒற்றைக்காட்டு யானை பாகுபலி மீண்டும் சமயபுரம் பகுதியில் நேற்று தனது நடமாட்டத்தை துவக்கி உள்ளது. இதனால் வனச்சாலைகளில் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறினார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாத வண்ணம் வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை சீரமைத்து நாள் தோறும் தண்ணீர் நிரப்பப்படுகிறது. மேட்டுப்பாளையம்,சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆறு பேர் கொண்ட இரு குழு அமைக்கப்பட்டு, இந்தக்குழுவினர் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் நுழையாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ரோந்து சென்று கண்காணித்து வருகிறோம். மேலும், வனச்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் தேக்கம்பட்டியில் இருந்து சமயபுரம் வரை விழிப்புணர்வு பதாகைகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.