இரண்டாம் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வடலூர், ஆக. 22: வடலூர் சத்ய ஞான சபையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரண்டாம் கட்டமாக ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும், வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான 106 ஏக்கரில் 71.20 ஏக்கர் நிலம் மட்டுமே தற்போது உள்ளது. இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழ்வேங்கை, கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த வினோத் ராகவேந்திரன் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் தெய்வநிலையத்தில் அறங்காவலர் குழு அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி கடந்த ஜூன் 19ம் தேதி முதற்கட்டமாக வள்ளலார் சத்திய ஞான சபை அருகில் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. நேற்று இரண்டாம் கட்டமாக மேலும் சில ஆக்கிரமிப்பு கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி சீல் வைத்தனர். பொக்லைன் மூலம் வீடு ஒன்று இடித்து அகற்றப்பட்டது. குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவியாளர் சந்திரன், அறங்காவலர் குழு தலைவர் அழகானந்தன், அறங்காவலர்கள் கனகசபை, கிஷோர் குமார், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார், சிறப்பு பணியாளர்கள், வருவாய் துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி