A.M. ராஜகோபாலன்ஒருவருக்கு இறைவன் அளிக்கும் ஒப்பற்ற பரிசு, “தன் கணவரே தனக்கு அனைத்தும்….!” என நினைக்கும் அன்பான மனைவியே எனக் கூறுகிறது “பூர்வபாராசர்யம்” எனும் மிக மிகப் பழமையான ஜோதிட நூல். இந்நூல், மகரிஷி பராசரியர் அருளியதாக நம்பப்படுகிறது. அன்பு நிறைந்த மனைவிக்கு இணையான பொக்கிஷம் அகிலத்தில் இல்லை! இது பெண்களுக்கும் பொருந்தும். அன்பான, நேர்மையான, ஒழுக்கமுள்ள கணவரே ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் ஆசையுமாகும். விவாகத்திற்குப் பொருத்தம் பார்ப்பதின் நோக்கமே, பெண் மற்றும் வரன் ஆகியோரிடையே இத்தகைய அமைப்பு உள்ளதா என்பதை அறிந்துகொள்வதற்கே! விவாகத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது, 11விதப் பொருத்தங்கள் பார்ப்பது சரியான வரனை நிர்ணயிக்க உதவும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. தினம், கணம், ரஜ்ஜு, வசியம், யோனி, ராசி, ராசி அதிபதி, ஸ்திரீ தீர்க்கம், மாகேந்த்ரம், நாடி, வெதை என்பவையே அந்தப் பொருத்தங்கள்.இந்தப் பொருத்தங்களும் பொதுவான பொருத்தங்களேயாகும். இவை சரியாக இருந்தாலும்கூட, பெண்பிள்ளை ஆகியோரின் தனிப்பட்ட ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால்தான், தோஷங்கள் இருப்பின், அவற்றின் தன்மை, அளவு, நிகழும் காலம், என்ற அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும். இவற்றை அறிந்துகொண்டால்தான், பரிகாரங்கள் அவசியமா, அவசியமெனில், எத்தகைய பரிகாரங்கள் பலனளிக்கும், அவற்றை எப்போது செய்ய வேண்டும்? என்பவை பற்றி மிகச் சரியாகத் தீர்மானிக்க முடியும்.குறிப்பாக, லக்கினத்திலிருந்து, 5 மற்றும் 7ம் இடங்களைச் சரிபார்க்கவேண்டியது, தற்கால சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிவிட்டது. மகா கவி காளிதாசரின் “உத்திர காலாம்ருதம்” என்ற ஜோதிட நூலும் 7ம் இடத்தைப்பற்றி விசேஷமாக விவரித்துள்ளது. இதை ஏன் கூறுகிறேன் என்றால், எமது இலவச ஜோதிட சேவையை நாடி என்னை நேரில் சந்தித்தும், பல கடிதங்களின் முலமும் தங்கள் மாப்பிள்ளைக்கு ஏற்பட்டுள்ள ஓர் குறிப்பிட்ட அந்தரங்கக் குறை பற்றி பெண்களைப் பெற்றவர்கள் எமக்குக் கூறிவருவதே காரணமாகும்.மாப்பிள்ளைக்குத் தங்கள் பெண்ணிடம் ஈடுபாடு இல்லை என்பது பற்றியும், தாம்பத்திய வாழ்க்கையில் மனமில்லை என்றும், ஏதோ தங்கள் பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காகவே திருமணம் செய்துகொண்டதாகவும் பல மாப்பிள்ளைகள் கூறுவது பற்றியும் பலர் எழுதியுள்ளனர். இத்தகைய விபரீத, அந்தரங்க ஏமாற்றத்தைத் தங்கள் பெற்றோரிடம்கூட கூறமுடியாமல் மனத்திற்குள்ளேயே வேதனைப்பட்டு தவிக்கும் பெண்களும், பரிகாரம் கேட்டு எமக்கு எழுதிய வண்ணம் உள்ளனர்.பல இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம், Internet (இணையதளம்) எனும் விஞ்ஞான வசதியே ஆகும். தரக்குறைவான சில பத்திரிகைகளுக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதில் பங்குண்டு. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆகியோரின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு அவசியமான கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை பாதிக்கும் பல காட்சிகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை இணைய தளத்தின் மூலம் பார்க்கும் வாய்ப்பு எளிதில் கிடைத்துவிடுவதால், பலவித மனசபலங்கள், குழப்பங்களினால் தவறான பழக்கங்களில் ஈடுபட்டு, திருமணத்திற்கு முன்பே, தங்கள் இளமையை இழந்துவிடுகின்றனர். பெரும்பாலும் இது இளைஞர்களையே அதிகமாக பாதித்துவிடுகிறது. “ஓரினச் சேர்க்கை” என்ற அருவருக்கத்தக்க, பழக்கம் (perversion of sex) உருவானதற்கும் மேலைநாடுகளின் (அ) நாகரீகக் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களின் தாக்கமுமே காரணங்களாகும்! தற்கால இளைஞர்களில் பலர், திருமணத்திற்கு முன்பே தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டுவிடுவதால், இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். இதனை மறைத்து, பிள்ளை வீட்டினர், தங்கள் பிள்ளைக்குத் திருமணமும் செய்து வைத்து விடுகின்றனர்.இந்நிலையில், ஒரு தவறும் செய்யாத நிரபராதியுமான பெண்கள்தான் வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டபோதுகூட, பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிப்பதற்குமுன் “Prayer” வகுப்பு என்று நடத்தப்பட்டு, அதன்மூலம் இறை பக்தியும், மனக் கட்டுப்பாடும் போதிக்கப்பட்டன. மனக் கட்டுப்பாடு எந்த அளவிற்கு ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பதையும், உடல்நலன் நம் நல் வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு அவசியம் என்பது பற்றியும் அகத்தியர், தேரையர், திருமூலர், போகர் போன்ற தமிழக சித்த மகா புருஷர்கள் வலியுறுத்தியுள்ளனர்.“உடலுறவு” ஆபாசமானதோ அல்லது அருவருக்கத்தக்கதென்றோ நம் நீதி நூல்களும், ஜோதிட கிரந்தங்களும், ஆயுர்வேத நூல்களும் கூறவில்லை. எவ்விதம் பசி, தாகம், நித்திரை, ஓய்வு ஆகியவை மனிதனின் மன மற்றும் உடல் நலன்களுக்கு அவசியமோ, அந்த அளவிற்கு உடல் உறவும் மனநலனுக்கு முக்கியம் என்பதை “சரகர் ஸம்ஹிதை” என்ற மருத்துவ நூலும் விளக்குகிறது. இதை நமக்கு வழங்கியவர், மகரிஷி சரகர். லக்கினத்திலிருந்து, 7ஆம் இடம் களத்திர, காம, சயன அனுபவங்களைக் குறிக்கிறது.5, 7ம் இடங்களுக்கு உள்ள தொடர்பு-! -ஜாதகத்தில் 5ம் இடம் என்பது பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமாகும். இந்த 5ம் இடத்திற்கும், 7ம் இடத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 7ம் இடம் தோஷமின்றி இருந்தால்தான், ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். தோஷம் கடுமையாக இருப்பின், குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பும் அந்த அளவிற்கு பாதிக்கப்படும். வாழ்க்கையில் குழந்தைகள் பிறப்பது மட்டும்தான் மிகப் பெரிய பேறு என நினைப்பது தவறு. நோய்கள், உடல்மன பாதிப்பு இல்லாமல், எதிர்காலத்தில் நற்பண்புகள் கொண்ட குழந்தைகளாக வளர்வதுதான் உண்மையான புத்திர பாக்கியமாகும்! அதனால்தான் ஔவையாரும், “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது; அதனினும் அரிது கூண், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது” என்றார். தற்காலத்தில், பல குழந்தைகள் “ஆட்டிஸம்” எனும் குறைபாட்டுடன் பிறப்பதை நாம் அறிவோம். இதற்குக் காரணம், கணவர் அல்லது மனைவியின் விந்து பெண்ணின் கருமுட்டை அளவிற்கு அதிகமான கதிர்வீச்சு பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதே காரணம் என்பதை ஆராய்ச்சி மூலம் சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பிரசித்திபெற்ற பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், தொலைக்காட்சிப் பெட்டிக்கு நேர் எதிரில் உட்கார்ந்து பார்க்கக் கூடாது என்பதைத் தற்கால மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்திவருவது, அனைவரும் அறிந்ததே! மிகக் கடுமையான 7ம் இட தோஷத்தினால் பெண்களின் திருமணம், விவாகரத்தில் முடிந்த திருமணங்கள் ஏராளம். “ஜோதிடம்” என்பது நம் நல்வாழ்க்கைக்கு சரியான வழிகாட்டும் ஒளிவிளக்காகும். ஆதலால்தான் “ஜோதிடம்” ஓர் தெய்வீகக் கலை (divine vcience) என்ற பெருமையைப் பெற்றுள்ளது.ஜோதிடர்களின் பொறுப்பு மகத்தானது. “ஜோதிடரே! நீங்கள் பார்த்துச் சொன்னால் போதும்…!” என்று பெண்ணைப் பெற்றவர்கள் கூறும்போது, தங்கள் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையையே அல்லவா அவரிடம் ஒப்படைக்கிறார்கள், பெண்ணின் பெற்றோர்கள்! ஆதலால், குறிப்பாகத் தற்கால சூழ்நிலையில், ஜோதிடர்கள் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வரன்களின் ஜாதகத்தில், 5, 7ம் இடங்களை ஆழ்ந்து கணித்துப் பார்க்கவேண்டியது மிகவும் அவசியம். ஜோதிடர்களின் பொறுப்பு மகத்தானது!…