Saturday, July 6, 2024
Home » இந்த பொம்மைகளுக்கு வயது 300!

இந்த பொம்மைகளுக்கு வயது 300!

by kannappan

நவராத்திரி என்றாலே அம்மன், அலங்காரம், பூஜைகள், விதவிதமான பயறுகள்,விரதம், தாம்பூலம், இதையெல்லாம் தாண்டி அழகிய பொம்மைகள்தான் நினைவுக்கு வரும். மார்க்கெட், பஜார் என எங்கே திரும்பினாலும் கண்கவர் பொம்மைகள்தான் கண்சிமிட்டும். இவ்வருடம் செஸ் விளையாடும் டீம், ‘பொன்னியின் செல்வன்’ கேரக்டர்கள், என நவராத்திரி கொலு பொம்மைகளும் டிரெண்டில் கெத்து காட்டிக் கொண்டிருக்கின்றன. எனினும் என்னதான் டிரெண்ட், வைரல் என இருப்பினும் 300 ஆண்டுகளுக்கும் மேல் நம்முடன் இருக்கும் பொம்மைகளில் ஒன்றுதான் ‘சென்னப்பட்ணா பொம்மைகள்’. நம் கோவில் கடைகளில் கிடைக்கும் கிலுகிலுப்பைத் துவங்கி, சொப்பு ஜாமான், தள்ளு வண்டி, குட்டிக்குட்டி மரப் பொம்மைகள், அடுக்கடுக்காக வெளியே வரும் வலைப் பொம்மைகள் என இவைகள்தான் பாரம்பரியமாக நம் வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள். எந்தக் குழந்தைப் பருவமும் இந்த பொம்மைகள் இன்றி கழியாது, எந்த நவராத்திரி படிகளும் இப்பொம்மைகள் இல்லாமல் நிறையாது.சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கறுப்பு என வண்ணமயமான இந்த பொம்மைகளின் பூர்வீகம் கர்நாடகா. சமீபத்தில் சீனா பொம்மைகள், ரஷ்யாவின் நெஸ்ட் பொம்மைகள் என 500,1000களில் விற்கப்படும் பொம்மைகளுக்குக் கூட பூர்வீகம் இந்த சென்னபட்ணா பொம்மைகள்தான். ஆனால் சென்னப்பட்ணா பொம்மைகளின் பூர்வீகம் பெர்சியா. இந்த பொம்மைகள் பெர்சியா கலாச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை. திப்பு சுல்தான் தனது ஆட்சி காலத்தில் மரப்பொம்மைகளை தயாரிப்பதில் உள்ளூர் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பெர்சியாவிலிருந்து கைவினைக் கலைஞர்களை வரவழைத்திருக்கிறார். இவரது ஆட்சியில்தான் இந்த பொம்மைகள் உருப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. பாவாஸ் மியான் என்பவர் இந்த சென்னபட்ணா பொம்மைகளின் தந்தை எனச் சொல்லப்படுகிறார். சென்னப்பட்ணா பொம்மைகளுக்காகத் தனது வாழ்க்கையை தியாகம் செய்தவர் இவர். பொம்மைகளைத் தயாரிப்பதற்காக ஜப்பானிய தொழில்நுட்பத்தை அவர் பயன்படுத்தியிருக்கிறார். மேலும் உள்ளூர் கைவினைக் கலைஞர்களுக்கு அவர்களின் கலையை மேம்படுத்த உதவியிருக்கிறார். ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக, இந்த பொம்மைகளைத் தயாரிப்பதில் வெப்பாலை மரமே முதன்மை மரமாக இருந்து வருகிறது. இருப்பினும் ரோஸ்வுட் மற்றும் சந்தனம் மரங்களும் அவ்வப்போது பயன்படுத்தப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தின் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சென்னப்பட்ணா என்ற நகரில் தயாரிக்கப்படும் மரப்பொம்மைகள் இவை. இப்பொம்மைகளின் தனித்துவமிக்க குறிப்பிட்ட வடிவங்களுக்காக மிகவும் புகழ்பெற்றவை. பாரம்பரியமிக்க கைவினைக் கலையாக கர்நாடக அரசால் நிர்வகிக்கப்படும் உலக வர்த்தக அமைப்பின் கீழ் புவியியல் அடையாளமாக இந்தக் கலை பாதுகாக்கப்படுகிறது.இந்த பொம்மைகள் தயாரிக்கப்படுவதாலேயே சென்னப்பட்ணா ‘பொம்பேகல ஊரு’ என செல்லமாக அழைக்கப்படுகிறது. அதாவது பொம்மைகளின் நகரம் என அர்த்தம். பல காலங்களாகவே பல்வேறு முன்னேற்றங்களை அடைந்து வரும் இந்த பொம்மை தயாரிக்கும் கலைக்காக பிரத்யேக மரங்கள் தேர்வு செய்யப்படும். பாரம்பரிய வெப்பாலை மரத்தோடு கூடுதலாக, இரப்பர், சைக்காமோர், சிடார், பைன் மற்றும் தேக்கு உள்ளிட்ட பிற மரங்களும் இப்போது பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொம்மைகள் அனைத்தும் கைகளால் வெட்டி, அறுத்து, செதுக்கி செய்யப்படும் பொம்மைகள் என்பதாலேயே இவைகளின் வடிவங்கள் இன்றும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. எப்படி நம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் சிறப்போ அதேபோல் இந்த சென்னப்பட்ணா பொம்மைகளும் அதீத தனித்துவம் வாய்ந்தவை. சுமார் 10,000க்கும் மேலான குடும்பங்கள் இந்த பொம்மைத் தயாரிப்பில் உள்ளனர். ஒரு காலத்தில் விற்பனையில் முதன்மை இடம் பிடித்திருந்த இந்த பொம்மைகள் காலப்போக்கில் நலிவடையத் துவங்கின. குறிப்பாக வெளிநாட்டு பொம்மைகளின் வரத்து, சீனப் பொம்மைகளின் தாக்கம் என குழந்தைகள் இந்த மரப்பொம்மைகள் மேல் ஆர்வம் காட்டுவதைத் தவிர்க்க ஆரம்பித்தனர். இதனால் பல பொம்மை உற்பத்தியாளர்கள் தொழிலை விட்டுவிட்டு வேறு கூலி வேலை, கட்டிட வேலை எனச் சென்று விட்டனர். இதனாலேயே இன்று வெறும் 10,000 குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதைக் கண்டு களையெடுத்த கர்நாடக அரசு, இந்த பொம்மைகளை புவியியல் அடையாளமாகவும், பாரம்பரியமாகவும் மாற்றி பொம்மைகளாக இல்லாமல் அதிக அளவில் வீட்டு டெகரேஷன்கள், அலங்கார பொருட்களாகவும் மாற்றினர். இப்போது சென்னப்பட்ணா பொம்மைகள் கடல் கடந்து கனடா வரை டெலிவரி செய்யப்பட்டுவருகின்றன. கோவில் கடைகளில் இன்றும் கண்சிமிட்டும் இந்த கொள்ளை கொள்ளும் பொம்மைகளுக்கு நிறங்கள்கூட இயற்கையான ரெசின்கள், மஞ்சள், இண்டிகோ, உள்ளிட்ட தாவர நிறங்களே பூசப்படுகின்றன.மேலும் அரக்குப் பூச்சு செய்வது இந்த பொம்மைகளின் சிறப்பம்சம். எனவே அக்காலத்தில் பிறந்த குழந்தைக்குக் கூட கைகளில் பயமில்லாமல் இந்த பொம்மைகளை கொடுத்திருந்தார்கள். எப்படி கைத்தறிப் புடவைகள் இன்று விலையேறிச் சென்றுவிட்டதோ ஒரு காலத்தில் சென்னப்பட்ணா பொம்மைகளின் அருமையும் தெரியும் தறுவாயில் அன்று 1000களில் விற்பனைக்குச் செல்லும் என்றால் கூட அது மிகையாது.தொகுப்பு : ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

six + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi