புதுடெல்லி: கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு, வரும் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. இந்நிலையில், கோவா விடுதலை தாமதத்திற்கு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருதான் காரணம் என்று பிரதமர் மோடி சமீபத்தில் விமர்சித்தார். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பதிலடி தந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிதம்பரம் அளித்துள்ள பேட்டியில், ‘கோவா சட்டப்பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் எந்த காங்கிரஸ் எம்எல்ஏ.வையும், இந்த முறை பாஜ.வால் விலைக்கு வாங்க முடியாது. கோவாவை விடுவிக்க சரியான நேரத்தில் நேரு தலையிட்டார். அதனால்தான், ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஒரு குரல் கூட எழவில்லை. மோடியும், அமித்ஷாவும் வரலாற்றை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு இந்தியாவின் வரலாறும் தெரியாது. இந்தியாவை நேரு எவ்வளவு திறமையாக வழிநடத்தினார் என்பதும் இவர்களுக்கு தெரியாது,’ என்றார்….