* ஆபாச அர்ச்சனை, அசிங்க படங்களால் அதிர்ந்து நிற்கும் நடுத்தரவர்க்கம்* அதிக வட்டியால் திருப்பிச்செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் சோகம்செல்போன், டிவி, பிரிட்ஜ் உள்பட சந்தையில் பல்வேறு மலிவு விலை பொருட்கள் மூலம் இந்திய மார்க்கெட்டை கைப்பற்றிய சீனா இப்போது ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திலும் கைவைக்கும் நாசகார வேலையை செய்து கொண்டு இருக்கிறது. இணையத்தில் பரவிக்கிடக்கும் லோன் ஆப்கள் (கடன் செயலி) மூலம் தான் இந்த சதியை அரங்கேற்றி இருக்கிறது. டீ கடையில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்ட இந்த நேரத்தில் சீனாவால் உருவாக்கப்பட்ட இன்ஸ்டா லோன், பாஸ்ட் கேஷ், குவிக் லோன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் லோன் ஆப்கள் இந்திய இணையதளத்தில் பரவிக்கிடக்கின்றன. இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் கொரோனா காலத்தில் தான் இந்திய மார்க்கெட்டுக்குள் நுழைந்துள்ளன. அன்றாடம் பணத்தேவையில் கையை பிசையும் நடுத்தர வர்க்கத்தினரை உடனடி பணம் என்ற ஆசையில் இந்த ஆப்கள் விழ வைக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தவில்லை என்றால் திரும்ப செலுத்தும் தொகையானது 60 முதல் 100 விழுக்காடு வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வட்டியும் மிக அதிகம். பணம் செலுத்தாதவர்களின் தனி நபர் தகவல்களை அனுப்பி மிரட்டியதுடன், தொடர்பு பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்களை முறைகேடாக சேகரித்து, கடன் பெற்றவர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைத்து, கடன் பெற்ற தகவல்களை தெரியப்படுத்தி அசிங்கப்படுத்துகின்றன.ரூ.10 ஆயிரம் கடன் பெற்றவர்கள் கூட பல லட்ச ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களது நிபந்தனைக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் மிரட்டல்தான். அந்த மிரட்டல் பல்வேறு ரகம். கடன் பெற்றவர்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவேற்றி அலறவைக்கும் அளவுக்கு இருக்கிறது அத்துமீறல். இதற்கு பயந்தே லோன் ஆப்கள் கூறும் தொகையை கட்டிவிட்டு கண்ணீர் விடும் மக்கள் ஏராளம். பலர் தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். சென்னை, பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, நொய்டா உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சைபர் கிரைம் போலீசார் வழியாக ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த ஆன்லைன் லோன் ஆப்கள் மீது புகார்கள் தொடர்ச்சியாக பதிவானதையடுத்து காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கியபோது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. அந்த ஆப்கள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல என்பதும், அத்தனையும் சீனாவின் ஊடுருவல் என்பதும் தெரியவந்தது. அதிர்ந்து போய்விட்டது ரிசர்வ் வங்கி. இதுபற்றி உடனடியாக ஒன்றிய அரசுக்கு தெரியப்படுத்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் அவசர கூட்டம் போட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இந்திய நிதிப்புலனாய்வு பிரிவு (எப்ஐயூ) இந்த விவகாரத்தை கவனிக்காமல் விட்டதால் இப்போது சிபிஐ, அமலாக்கத்துறை வசம் லோன் ஆப் மோசடி சென்று இருக்கிறது.எல்லையில் நுழைந்தால் பதிலடி கொடுத்து விடலாம். ஆனால் மறைமுகமாக நம் தேசத்தில் ஒவ்வொருவரது இல்லத்திலும் நுழைந்தால்.. அந்த வேலையை தான் லோன் ஆப் மூலம் சீனா செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததால் எச்எஸ்பிசி வங்கியில் ரூ47 கோடி முடக்கப்பட்டது. அப்போதே உஷாராகி இருந்தால் அனைத்தையும் தடுத்து இருக்கலாம். அனைத்தும் கைமீறி விட்டது. இப்போது அன்றாடம் ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் பேடிஎம், கேஷ்பிரி, ரேசர்பே உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் லோன் ஆப்கள் பணத்தை சீனாவுக்கு கடத்தி உள்ளன. இதுதவிர ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் பல ஆயிரம் கோடி சீனாவுக்கு சென்று இருக்கலாம் என்கிறது அமலாக்கத்துறை. இது சீனாவின் 2.0 நவீன புதுவித தாக்குதல்தான். இதில் இருந்து தப்பிக்க செல்போன் பயன்படுத்தும் ஒவ்வொரு நபரும் விழிப்புணர்வு பெறுவது அவசியம்.உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு பிறகு 5வது இடத்தை பிடித்து இருக்கிறது இந்தியா. அந்த இடத்தில் இருந்த இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியிருக்கிறது. வேகமாக முன்னேறும் இந்திய பொருளாதாரத்தை ஸ்டிரா போட்டு உறிஞ்சும் பணியை மேற்கொண்டு இருக்கிறது சீனா.கணக்கில் வந்தது மட்டும் ரூ1300 கோடிலோன் ஆப்கள் மூலம் சீனாவுக்கு சட்டவிரோதமாக ரூ1300 கோடி சென்று இருப்பது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. இவை எல்லாம் புகார்கள் அடிப்படையில் வந்த கணக்கு. எந்தவித கணக்கும் இல்லாமல் மெகா தொகை சென்று இருக்கலாம் என்கிறது அமலாக்கத்துறை. ஐதராபாத் காவல்துறை நடத்திய விசாரணையில் மட்டும் போலி நிறுவனங்களை நடத்தும் சீன நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் ரூ21,000 கோடி மதிப்பிலான 1.4 கோடி பரிவர்த்தனைகளை மேற்கொண்டது தொியவந்துள்ளது. தெலங்கானாவில் மட்டும் இவ்வளவு பெரிய மோசடி என்றால் நாடு முழுவதும்?.இந்த மாதத்தில் மட்டும் ரூ145 கோடி சிக்கியதுஇணையதள வர்த்தக பரிவர்த்தனையில் நாம் செலுத்த வேண்டிய தொகையை நமது வங்கியில் இருந்து ஈஸ்பஸ், ரேசர்பே, கேஷ்பிரி, பேடிஎம் நிறுவனங்கள் மூலமாக உரிய நிறுவனத்திற்கு செலுத்துகிறோம். இந்த நிறுவனங்கள் தான் சீன லோன் ஆப்பிற்கு உதவி செய்துள்ளன. இந்த மாதம் மட்டும் நாடு முழுவதும் பல இடங்களில் நடத்திய சோதனையில் ரூ145 கோடி சிக்கி உள்ளது. மேலும் இந்தியாவின் முக்கிய கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்களில் ஒன்றான வாசிர்எக்ஸ்(WazirX) நிறுவனத்தின் ரூ64.67 கோடி மதிப்புள்ள வங்கி வைப்புகளை அமலாக்க இயக்குநரகம் முடக்கியது. * இன்றைய இணைய தளத்தில் கேஸ் போர்ட், ரூபி வே, லோன் கியூப், வாவ் ரூபி, ஸ்மார்ட் வாலட், ஹைய் ரூபி, ஸ்விப்ட் ரூபி, யா கேஸ், ஐஆம் லோன், குரோவ் ட்ரீ, மேஜிக் பேலன்ஸ், ரெட் மேஜிக், யூவால்ட், மாசென் ரூபி, லாரி லோன், விங்கோ லோன், சிசி லோன், சிட்டி லோன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் லோன் ஆப்கள் குவிந்துள்ளன. * இந்த லோன் ஆப்களுக்கு எச்பிஇசட்(HPZ) ஆப் வழியாக பணப்பறிமாற்றம் நடந்து இருக்கிறது. இதற்கு ஈஸ்பஸ், ரேசர் பே, கேஷ் பிரி, பேடிஎம் போன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற நிறுவனங்கள் உதவி செய்துள்ளன.* சீனாவை சேர்ந்த ஜிலியன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், எக்ஸ் 10 பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் , நிமிஷா பைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவை ஏராளமான ஆப்களை நடத்தி வந்துள்ளன.1 ரிசர்வ் வங்கி அனுமதியுடன் இயங்கும் செயலிகளால் ஆபத்தில்லை. 2 அறியப்படாத, சரிபார்க்கப்படாத இணைய தள இணைப்புகள் உங்கள் செல்போனுக்கு வந்தால் கிளிக் செய்யாதீர்கள். எதிர்காலத்தில் தவறுதலாக அவற்றை தொடுவதை தவிர்க்க உடனடியாக அதை டெலிட் செய்ய வேண்டும்.3 புதிய ஆப்பை டவுன்லோடு செய்வதற்கு முன்பு அதை வெளியிட்டவர்கள் யார், அதன் உரிமையாளர்கள் யார் என்பதையும், பயன்படுத்திய நபர்களின் கருத்துக்களையும் சரிபார்க்க வேண்டும்.4 புதிய ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் வரும் போது, தேவைப்படும் இடத்தில் தான் உங்கள் படம், செல்போன் எண் உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்து வழங்க வேண்டும்.* கூகுள் ப்ளே ஸ்டோரில் 3.5 முதல் 4.8 வரையிலான ரேட்டிங்குகளுடன் உள்ள லோன் ஆப்கள் 70,000 முதல் 14 லட்சம் வரை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.* ஜனவரி 2021ல் சுமார் 400 லோன் ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.* ஆண்டிராய்டு போன்களில் இருக்கும் 80க்கும் மேலான ஆப் ஸ்டோர்களில் 1100 கடன் வழங்கும் ஆப்ஸ் உள்ளன. இதில் 600 ஆப்கள் சட்டவிரோதமானவை.* 2020 ஜனவரி முதல் 2021 மார்ச் மாதம் வரை 2500க்கும் மேற்பட்ட டிஜிட்டல் கடன் மோசடி புகார்கள் பதிவாகி உள்ளன. * அதிகபட்ச புகார்கள் மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ளன. அதை தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உபி, மேற்கு வங்கம், டெல்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் டிஜிட்டல் கடன் புகார்கள் பதிவாகி உள்ளன.* ஆண்டிராய்டு போன்களில் இருக்கும் 80க்கும் மேலான ஆப் ஸ்டோர்களில் 1100 கடன் வழங்கும் ஆப்ஸ் உள்ளன. இதில் 600 ஆப்கள் சட்டவிரோதமானவை.* மொநீட் (MoNeed)என்ற கடன் வழங்கும் சீன ஆப்பில் மட்டும் 3.50 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் தனிநபர் தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்ன சொல்கிறார்கள்? பேடிஎம்: லோன்ஆப் மோசடி தொடர்பாக எங்களிடம் சில தகவல்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. எங்களுக்கும், சீன கடன் செயலி தொடர்பான நிறுவனத்துடனும் எந்த விதமான தொடர்பும் இல்லை. ரேசர்பே: ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து நடந்த சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளது. இந்த விசாரணையில் உதவ அதிகாரிகளுக்குத் தேவையான தகவல்களை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். ஈஸ்பஸ்: அமலாக்கத்துறை விசாரணை தொடங்குவதற்கு முன்பே சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை நாங்கள் தடுத்து விட்டோம். எங்கள் வணிக நடவடிக்கைகள் தற்போதுள்ள விதிமுறைகளின்படி நடக்கின்றன….