நாகப்பட்டினம்,செப்.27: நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார். ரூ.35 ஆயிரம் மதிப்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசால் விலையில்லாமல் வழங்கப்படும் காதொலி கருவி, செயற்கை அவயம் வேண்டி பெறப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 7 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம்- மதிப்பில் நவீன செயற்கை அவயம் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
அதனைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து சர்வதேச காதுகேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகைமொழி தினம் அனுசரிக்கும் விதமாக கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மரச்செடிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், செவித்திதிறன் பாதிக்கப்பட்டோருக்கான உயர்நிலை சிறப்புப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.