பெங்களூரு: பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களில் தேசியளவில் கர்நாடகம் 6வது இடத்தில் உள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளதில் 21வது இடத்தில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.நாட்டில் சமீப காலமாக பெண்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மீதான பாலியல் பலாத்காரம் செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை. பலாத்காரத்தில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்துள்ள சட்டங்களும் முழு பலன் கொடுக்கவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 5 ஆண்டுகளில் தேசியளவில் 1.47 லட்சம் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி உள்ளனர். அதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீதான குற்றங்கள் மட்டுமே நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் 800க்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான சம்பவம் நடக்கும் மாநிலங்களில் தேசியளவில் கர்நாடகம் 6வது இடத்தில் உள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் 21வது இடத்தில் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது….