கோவை, செப்.29: கோவை சேர்ந்தவர் வேல்முருகன் (54). இவர், நெஞ்சு வலியால் சாலையில் மயங்கி விழுந்து விட்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவருக்கு முதலுதவி அளித்து கோவை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத்துவமனை வருவதற்குள் 15 நிமிடம் ஆனது. சுயநினைவை இழந்திருந்ததால் வேல்முருகனின் நாடித்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறிக்க இயலவில்லை.
இதையடுத்து கேஎம்சிஎச் மருத்துவர்களான பாலகுமாரன், ரமேஷ், குணசீலன், சிவக்குமார், திலீபன், யுவராஜ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக நோயாளியின் மார்பை அழுத்தி சிபிஆர் சிகிச்சை அளித்தனர். 15 நிமிடத்தில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டது. எக்மோ கருவி உதவியுடன் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் நோயாளியின் உடல்நிலை மேம்பட்டு சுயநினைவு திரும்பியது. மூன்று நாட்களுக்குப் பிறகு எக்மோ கருவி அகற்றப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு நோயாளி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.