சிவகங்கை, ஜூன் 25: சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ,மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரசு இசைப்பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது:சிவகங்கையில் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-2025 ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம்,தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம். 12 முதல் 30வயது வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் பிரிவுகளில் சேர 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தவில், நாதசுரம் வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை. ஆண் மாணவர்களும் பரதநாட்டிய பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். அனைத்து பாடப்பிரிவிற்கும் பயிற்சி காலம் 3ஆண்டுகள். பயிற்சி கட்டணம் ஆண்டுக்கு ரூ.350மட்டும். இலவச பஸ் பாஸ், கல்வி உதவித் தொகை(மாதம் ரூ.400), அரசு மாணவர் விடுதி வசதி உண்டு. விருப்பமுள்ள மாணவ,மாணவியர்கள் தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகில், அல்லூர் பனங்காட சாலை, சிவகங்கை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.