Monday, July 8, 2024
Home » இங்கி. அணியுடன் 3வது டி20: முத்திரை பதிக்குமா இந்தியா?

இங்கி. அணியுடன் 3வது டி20: முத்திரை பதிக்குமா இந்தியா?

by kannappan

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையில் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில்  முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. 2-வது ஆட்டத்தில் 165 ரன்னை மிக எளிதாக சேசிங் செய்தது. இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரர் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கி 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 56 ரன்கள் குவித்து அசத்தியதுடன் அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார். முதல் ஆட்டத்தில் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சி அளித்த கேப்டன் விராட்கோஹ்லி 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தியதுடன், கடைசி வரை களத்தில் நின்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.இந்த நிலையில் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று 3வது டி20 போட்டி நடக்கிறது. இதில் இரண்டு அணிகளும் முன்னிலை பெற வரிந்து கட்டுகிறது. கடந்த ஆட்டத்தில் எந்தவித அச்சமுமின்றி ஆடிய இஷான் கிஷன் அணியில் இடத்தை தக்க வைத்து கொள்வார். இதுபோல் புதிதாக இடம்பெற்று பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத சூர்யகுமார் யாதவும் நீடிப்பார். அதேவேளையில் முதல் 2 ஆட்டங்களில் (1, 0) சொதப்பிய லோகேஷ் ராகுல் கழற்றி விடப்படக்கூடும். அவருக்கு பதிலாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோகித் சர்மா திரும்புவார் என்று தெரிகிறது. இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் அதிரடிக்கு பெயர் போன பேட்ஸ்மேன்களும், ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர். காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு வலுசேர்க்கும். மார்க் வுட் களம் இறங்கும் பட்சத்தில் கிறிஸ் ஜோர்டான் நீக்கப்படலாம். முதல் 2 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் டாம் கர்ரனுக்கு இடம் கிடைப்பது கடினம் தான். முந்தைய ஆட்டத்தில் புவனேஷ்குமார், ஷர்துல்தாகூர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சு எடுத்தது. இதுபோல் இந்திய அணியின் அதிரடி பேட்டிங் வியூகத்துக்கும் நல்ல பலன் கிடைத்ததால் இந்த ஆட்டத்திலும் அதனை தொடருவதுடன், தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முழு முயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்தி வெற்றிப்பாதைக்கு திரும்ப நம்பர் ஒன் அணியான இங்கிலாந்தும் தீவிரம் காட்டும் எனவே இன்றைய ஆட்டத்தில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி  இதில் இரு அணிகளும் தலா 8 வெற்றி கண்டுள்ளன. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு: இந்தியா: ரோகித் சர்மா அல்லது லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், விராட்கோஹ்லி (கேப்டன்), ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல். இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட் அல்லது கிறிஸ் ஜோர்டான். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. …

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi