சென்னை: உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்கள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை தற்போது மூன்றாவது முறையாக 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, நெய்யின் விலை சுமார் 23 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெயின் விலையையும் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வின்மூலம் ஏழையெளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும். எனவே உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….