அம்பத்தூர்: ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்ட பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, நடத்தை விதிகள் கடந்த மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ₹50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அம்பத்தூர், சி.டி.எச் சாலை, உழவர் சந்தை அருகில் அம்பத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரி நர்மதா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 8 லட்சம் இருந்தது. விசாரணையில், அதில் வந்தவர் அம்பத்தூர் – செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் செல்வநாதன் (47) என்பதும், எரிபொருள் விற்பனை செய்த பணத்தை பாடியில் உள்ள வங்கியில் செலுத்த கொண்டு செல்வதாக கூறினார். ஆனால், அந்த பணத்திற்கான ஆவணம் இல்லாததால், அதிகாரிகள் செல்வநாதனிடம் இருந்து 8 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அதை அம்பத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயகுமாரியிடம் ஒப்படைத்தனர். அவர் அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார்….
ஆவணமின்றி எடுத்து சென்ற 8 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிரடி
previous post