Tuesday, October 1, 2024
Home » ஆவடியில் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!

ஆவடியில் நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.!

by kannappan

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 16.3.2022 அன்று அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேசினார். அப்போது, அம்மாணவிகள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்த்திட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், தாங்கள் வசிக்கும் ஆவடி நரிக்குறவர் குடியிருப்புகளை மேம்படுத்திடவும், தங்கள் கல்விக்கு தேவையான உதவிகளை செய்திடவும் கேட்டுக் கொண்டார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். பின்னர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வீடியோ அழைப்பில் ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு மக்களிடம் உரையாடினார். அப்போது அம்மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர். அதனையேற்று, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆவடியில் இன்று நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அம்மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். முதலில், திருமுல்லைவாயல் குடியிருப்பு  பகுதியில் உள்ள  ஜெயா நகரில் நரிக்குறவர் பயனாளிகளுக்கு முதலமைச்சரின்  விரிவான மருத்துவக்  காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும்,  குடும்ப  அட்டை 20 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை 4 நபர்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 38 நபர்களுக்கும்  என மொத்தம் 101 நரிக்குறவர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, ஆவடி பருத்திப்பட்டுக் கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் மாணவி தர்ஷிணி வீட்டிற்குச் சென்று உணவு உண்டார். மேலும், மக்கள் பயன்பட்டிற்காக உயர் மின்கோபுர விளக்குகளையும், குடிநீர்த் தொட்டிகளையும் திறந்து வைத்தார். அதன் பிறகு, நரிக்குறவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்  காப்பீட்டு அட்டை 30 நபர்களுக்கும்,   குடும்ப  அட்டை 18 நபர்களுக்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 6 நபர்களுக்கும், கிராம நத்தம் பட்டா 46 நபர்களுக்கும் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி 22 நபர்களுக்கும் என மொத்தம் 122 பயனாளாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். அப்போது அம்மக்கள் “எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் நேரில் வந்ததை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை, எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, நீங்கள் பொறுப்பேற்றவுடன் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், சாலைகள், குடிதண்ணீர் வசதி ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்துக் கொண்டனர். அதற்கு மாண்புமிகு முதலமைச்சர் “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம் என்றும், கடந்த மார்ச் 31-ஆம் தேதி புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்தித்தபோது கூட, நரிக்குறவர் சமுதாயத்தை பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தி மனு வழங்கினேன்” என்றும் தெரிவித்தார். ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சென்னை திரும்பும் வழியில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, வழக்குகளின் பதிவேடுகள், பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் திரு. ஜி. உதயகுமார், துணை மேயர் திரு.எஸ். சூர்யகுமார், நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.பா.பொன்னையா, இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. ஆல்பி ஜான் வர்கீஸ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். …

You may also like

Leave a Comment

13 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi