சென்னை: நாமக்கல்லில் கடந்த 8ம் தேதி நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ‘முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்போது இல்லை, இறைவனடி சேர்ந்து விட்டார்’ என்றார். இதற்கு ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை திமுக எம்பியுமான கலாநிதி வீராசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் திமுகவினர் பலரும் அண்ணாமலையின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கலாநிதி வீராசாமி, “தனது கொள்ளு பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று (நேற்று முன்தினம்) குடும்பத்துடன் கலந்துகொண்டு மகிழ்ந்த ஆற்காட்டார் (என் தந்தை) குறித்து, எப்போதும் எங்கள் தலைவர்களை பற்றி உளறும் பாஜ தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை கூறியதற்கு வேதனையுடன் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் நலமாக உள்ளார்” என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. கலாநிதி வீராசாமியின் பதிவை ரீ ட்வீட் செய்து, பாஜ தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில், ‘‘உங்களுடைய தந்தையார் அண்ணன் ஆற்காட்டார் நீண்ட ஆயுளோடு உங்கள் அனைவருடைய அரவணைப்போடு நன்றாக வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்! நாமக்கல் பொதுக்கூட்டத்தில் தவறுதலாக உங்களுடைய தந்தையார் இறைவனடி சேர்ந்து இருக்கின்றார் என்று சொன்ன கருத்துக்காக வருந்துகின்றேன்!” என்று தெரிவித்துள்ளார். …